தேங்காய்
எலும்பு மண்டலம்
நாம் உண்ணும் உணவானது ஏழு தாதுக்களாக மாற்றம் அடைகின்றன.
1 இரசம்
2 இரத்தம்
3 மாமிசம்
4 கொழுப்பு
5 எலும்பு
6 மஜ்ஜை
7 சுக்கிலம்
நமது உடலின் முக்கியமான சேமிப்பு கிடங்கு எலும்பு. நாம் சாப்பிடும் உணவின் ஊட்ட சக்தி எலும்பு, எலும்பு மஜ்ஜையில் சேகரிக்கப்படுகின்றது. சேமிப்பு எலும்பில் சேர்ந்தால் உடல் பருமன் வராது. அப்படி எலும்பில் சேமிக்காமல் தசை தோல்களில் சேமிப்பு நடந்தால் உடற்பருமனாகும். தசை தொள, தொளவென்று தொங்கும் நிலை (ஒபிசிட்டி) ஏற்படும்.
நாம் உணவில் திப்பிலியை சேர்க்கும் பொழுது இந்த கொழுப்பானது எலும்பு, மஜ்ஜை வரை கொண்டு சேர்க்கும். உடலுக்கு உருவம் கொடுப்பது எலும்பு. எலும்பை பற்றிக் கொண்டு தான் எல்லா உறுப்புகளும் செயல்படுகின்றன.
நம் உடம்பில் 75% நீர் உள்ளது. அது கொழுப்பு என்னும் உறைக்குள் இருக்கின்றது உதாரணமாக ஒரு பிளாஸ்டிக் பையில் நீர் உள்ளது. அந்த பை அந்த தண்ணீரை வெளியேற விடாமல் தாங்கி பிடித்துக் கொள்கிறது. அது போல் உடம்பு என்னும் எண்ணெய் பசைக்குள் நீர் இருக்கிறது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஒரு கொழுப்பு படிவம் அமைந்துள்ளது. பிளாஸ்டிக் பையில் ஒரு ஓட்டை போட்டால் நீர் வடியும். அது போல இந்த எண்ணெய் பசை உடலில் இல்லா விட்டால், அதன் தரம் அடர்த்தி குறைந்து விட்டால் நீர் ஒழுகும். உடலில் நீர் சத்து வற்றி, குறைந்து விடும் நிலை ஏற்படும். உடம்பில் எண்ணெய் பசை இல்லாவிட்டால் உடலில் ஈரபதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஓட்டைபானையில் நீர் வடிந்து கொண்டிருப்பது போல் வியர்வையாக வெளியேறும். தலை, கை, கால் வியர்த்து போதல், சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்சத்துக்கள் அனைத்தும் வடிந்து விடும். இதனால் உடல் சூம்பி போகும், உடல் ஆற்றலை இழக்கும். எது சாப்பிட்டாலும் உடலால் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் சிறுநீரில் சென்று விடும். இதற்கு காரணம் உடலில் உள்ள ஈரபதத்தை வெளியே விடாமல் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய எண்ணெய் பசை (கொழுப்பு) உடலில் இல்லை.
எலும்பிற்கு உறுதியை தருவது கொப்பரை தேங்காய். இதில் உள்ள கொழுப்பு உடம்பிற்கு மிகவும் இன்றியமையாதது. பச்சைத் தேங்காயை விட கொப்பரை தேங்காய்க்கு ஆற்றல் அதிகம்.
மனிதர்கள் ஒரு மிருக கொழுப்பிலிருந்து பெறும் ஆரோக்கியத்தை விட தாவரங்களிலிருந்து பெறக்கூடிய கொழுப்பு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. தேங்காயில் பிரபஞ்ச சக்தி அதிகம் கிடைக்கிறது என்று வலியுறுத்தினார்கள். தேங்காய்க்கு மிகப்பெரிய மரியாதையுண்டு. கோவில் கலசங்களில் தேங்காய் வைப்பார்கள். இது கும்ப மரியாதை என்று அழைக்கப் படுகிறது. எனவே தேங்காய்க்கு சிறப்பான மதிப்பு உண்டு. ஆனால் நாம் அதை சாப்பிட்டால் அது கொழுப்பு என்று கூறி அதை சாப்பிட விடாமல் செய்து விட்டார்கள்.
எனவே கொப்பரை தேங்காய் தான் சிறப்பானது. சாதாரண தேங்காயை விட கொப்பரை தேங்காயில் எண்ணெய் பசை அதிகம்.
“தேங்காயை முற்ற வைத்து சாப்பிட வேண்டும்”.
“வாழையை பச்சையாக சாப்பிட வேண்டும்”.
ஆனால் நாம் தேங்காயை பச்சையாக சாப்பிடுகின்றோம். வாழையை பழுக்க வைத்து சாப்பிடுகின்றோம். கலியுகத்தில் மனிதன் எல்லாவற்றையும் எதிர்மறையாக செய்கின்றான். தேங்காயில் உள்ள எண்ணெய் பசை உடலுக்கு மிகவும் நல்லது. பிறந்த குழந்தைக்கு கூட தேங்காய் எண்ணெயை கொடுக்கலாம்.
இப்பொழுது நாம் சாப்பிடும் எண்ணெய் பொருட்கள் தரமான எண்ணெய் கிடையாது. உடம்பின் அடிப்படை ஆதாரம் எலும்பும், எலும்பு மஜ்ஜையும் தான். இதில் தான் நமது ஊட்ட சத்துக்கள் சேமிக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜையில் ஊட்ட சத்துக்கள் இல்லையென்றால் நம்மால் அவசர காலங்களில் ஏற்படும் உபாதைகளுக்கு உடலானது தனக்குத்தானே நிவாரணம் செய்து கொள்ள நிச்சயம் முடியாது. நமக்கு உடம்பில் ஏதாவது பிரச்சனை எனில் சேமிக்கப்பட்ட பாஸ்பரஸ், மெக்னீசியம் , கால்சியம் போன்ற ஊட்ட சத்துகளை நம் உடம்பு பயன்படுத்திக் கொள்ளும். நம் உடம்பில் சேமிப்பு இல்லையென்றால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கடலில் கொட்ட வேண்டிய பெட்ரோலிய கழிவான பாரபின் ஆயிலை உண்ணத் தகுந்த எண்ணெய் என்று சொல்லி அனைவரையும் உண்ண வைத்து விட்டனர். இதனால் அனைவருக்கும் மூட்டு வலி, கை கால் வலி போன்ற நோய்களுக்கும், இந்தளவிற்கு ஆரோக்கிய வீழ்ச்சிக்கும் காரணம் ரீபைண்டு ஆயில். நமது ஆரோக்கியத்தின் அடிப்படை இரகசியமே இந்த எலும்பும், எலும்பு மஜ்ஜையும் தான். நம்மை சுற்றி மிகப்பெரிய நாச வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானியனுக்கு கொடு என்ற பழமொழி உண்டு. வைத்தியத்திற்கும் மிஞ்சியது தான் எண்ணெய். ரீபைண்ட் ஆயிலை உபயோகத்ததின் விளைவாக உடலின் மொத்த ஆரோக்கியமும் அழிவுக்குட்பட்டு உடலில் செல்லின் உருவ அமைப்பே மாறிவிட்டது. உடலில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்கலாம். நம் உடலுக்கு கொழுப்பு (எண்ணெய்) அவசியம். நாம் எண்ணெய்யை சமையலில் தான் பயன்படுத்துகின்றோம். யாரும் இதை இயற்கையா உபயோகிப்பதில்லை. சாதாரணமாக 1 ஸ்பூன் எண்ணெயை அல்லது தேங்காய் எண்ணெயை சமைக்காமல் நேரிடையாக வாயில் ஊற்றி அடக்கி வைத்து 30 நிமிடம் கழித்து பின் விழுங்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது.
ஏன் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்?
- நாம் எண்ணெய் தேய்த்து குளிப்பது எதற்கெனில் உடலில் உள்ள ஈரபதத்தினை வெளியேறாமல் பாதுகாக்கத்தான். உடலில் அதிகமாக நீர்சத்து வெளியேறக் கூடாது இந்த எண்ணெய்பசை மிக முக்கியமாக மண்டையோட்டிற்கு தான் தேவை. நமது மூளை செல்கள் வெளியில் உள்ள தட்ப வெப்ப நிலையால் பாதிக்கக்கூடாது. நமது மூளையில் உள்ள திரவம் உறைந்து போகக் கூடாது. இதற்கு எண்ணெய்பசை தேவை. இதற்காக தான் நாம் தலையில் எண்ணெய் தேய்க்கின்றோம். நாம் நமது தட்ப வெப்ப நிலைக்கு கண்டிப்பாக தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.
உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு (ஹெச்.டி.எல்) குறைந்தால் எலும்பு வலி ஏற்படும். எண்ணெய் பசை கட்டாயம் ஒரு மனிதனுக்கு வேண்டும். நாம் குடிக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் செரிப்பதற்குக் கூட எண்ணெய் பசை வேண்டும். எண்ணெய் பசையில்லை என்றால் தண்ணீர் கூட செரிமானம் ஆகாது.
பித்தம் என்பது ஒரு எண்ணெய் பசை. இது செறிவூட்டப்பட்ட நிலையில் உள்ளது. அந்த எண்ணெய் பசை தான் செரிமானத்திற்கு முக்கியம். எந்த காய் பழமாக இருந்தாலும் அதன் தோல் பகுதியில் எண்ணெய் பசை இருக்கின்றது. எண்ணெய் பசை இருப்பதால் தான் காய்களில் தோலே உருவாகின்றது. மற்ற விலங்குகள் அனைத்தும் காய்களை தோலுடன் உணவாக உட்கொள்கிறது. மனிதன் மட்டும் தான் தோல்களை நீக்கி விட்டு உண்ணுகிறான். இதனால் நமக்கு இயற்கையாக கிடைக்க வேண்டிய எண்ணெய் பசை கிடைப்பதில்லை. அந்த எண்ணெய் பசை நமக்கு வேண்டும். அந்த மாதிரி எண்ணெய் பசையிருந்தால் வியர்க்காது.
காய்கறிகளில் பூச்சிமருந்து அடிப்பது பதிப்பை தருமா?
காய்கறிகளில் பூச்சிமருந்து அடிக்கின்றார்கள். அதனால் பச்சையாக சாப்பிட்டால் நமக்கு பாதிப்பு வரும் என்று காரணம் கூறி சிலர் பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இது தவறான கணிப்பு. ஏதேதோ காரணம் காட்டி வேண்டாம் என்று கூறுகின்றோம். இவ்வளவு மருந்து அடித்தும், இவ்வளவு உரம் போட்டும் அது சக்தியோடு வேலை செய்கிறது. இதன் மதிப்பு 0.1% தான். ஆனால் இதை சாப்பிடாமல் விட்டு விட்டால் 100% பிரச்சனை வரும். அதில் ஏற்படும் நஞ்சுகள் எதுவாக இருந்தாலும் அதையே சொல்லக்கூடிய ஆற்றல் அந்த காய்க்கே உண்டு. பூச்சிக்காக மருந்து அடித்தார்கள். அந்த பூச்சி சாகும் பொழுது அந்த காயும் சேர்ந்து தானே செத்திருக்க வேண்டும். அது இறக்காமல் வளர்ச்சி தானே அடைந்திருக்கின்றது. மருந்து அடித்த பிறகும் தன் உயிராற்றலை பெருக்கி இருக்கிறது. இவ்வளவையும் அது தாங்கி வளர்ந்து இருக்கின்றது அல்லவா. அது இறக்காமல் இருக்கிறது என்றால் அதன் உயிராற்றல் எவ்வளவு சிறந்தது. எனவே அதை உண்ணும் போது எப்படி நமக்கு தீங்கு வரும்.
காய்கறிகளில் உள்ள இரசாயனங்களை எளிமையாக நீக்க ஒரு பாத்திரத்தில் புளி உப்பு கரைசலில் காய்களை சிறிது நேரம் ஊர வைத்து கழுவினால் எந்த மாதிரியான நஞ்சும் கரைத்து வெளியேற்றி விடும். எனவே காயில் உள்ள நஞ்சால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த காயில் உள்ள சத்து நம்மை காப்பாற்றும். எனவே தேங்காய் சாப்பிடுவதும் ஒன்று தான். காய்கறிகளை தோலோடு சாப்பிடுவதும் ஒன்று தான்.
கொப்பரை தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- மண்டையோட்டின் உட்புறம் உள்ள திரவம் கரைந்து கண் மூக்கு வழியாக வரும் போது அதை சைனஸ் என்று கூறுகின்றோம். சைனஸ் உருவாக காரணம் உடலில் போதுமான எண்ணெய் பசை இல்லை. சைனஸ் பாதிப்பால் ஏற்படும் தலைவலி இவற்றிற்கு கொப்பரை தேங்காய் சிறந்த தீர்வு கொடுக்கும்.
- உடல் முழுவதும் வலி தொட்டாலே வலி என்றால் உடலின் ஒட்டு மொத்த எலும்பும் பலவீனமாக இருக்கின்றது என்று பொருள்.
- கண்களில் நீர் வடிதல்.
- காதுகளில் உள்ள எண்ணெய் பசை குறையும்போது காது மந்தமாக கேட்கும். மூக்கிலிருந்து நீர்வடிதல், தும்மல் ஏற்படும்.
- எலும்புகள் எப்படி உறுதியாக இருக்கின்றதோ அதே போன்று பற்களும் உறுதியானவை. பற்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் எண்ணெய் பசை (கொழுப்பு) தேவை. இல்லையெனில் பற்களில் சொத்தை ஏற்படும்.
- மார்பு எலும்பு பாதிக்கப்பட்டு நெஞ்சுவலி எலும்பு வலி இருமல் ஏற்படும். இருமும்போது சளியுடன் இரத்தம் வரலாம். இருமினால் நெஞ்சு வலி ஏற்படும். இதற்கு காரணம் எலும்பு பலவீனம்.
- சாப்பிடும் உணவை செரிப்பது தான் பித்தநீர். இந்த பித்த நீரும் ஒரு வகை கொழுப்பு. எனவே கொழுப்பு சரியாக இருந்தால் தான் செரிமானம் நன்றாக நடைபெறும். சாப்பிட்டால் நெஞ்சுகரிப்பு ஏற்படும். இதற்கு காரணம் உடம்பில் நல்ல கொழுப்பு இல்லை. தேங்காய் சட்னி சாப்பிட்டேன். அதனால் தான் நெஞ்சு கரிக்கின்றது என்று சிலர் கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. உடலில் ஒரு புண் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெயை தடவி புண்ணை ஆற்றுகின்றோம். அப்படியென்றால் தேங்காய் சாப்பிட்டால் புண்ணாகி நெஞ்சு கரிப்பு ஏற்படுமா? இதற்கு காரணம் தேங்காயுடன் பச்சை மிளகாய் வரமிளகாய் சேர்ப்பது தான் காரணமேயன்றி தேங்காயால் நிச்சயமாக கிடையாது. எனவே நெஞ்சு கரிப்பிற்கு காரணம் மிளகாய் மற்றும் உடலில் எண்ணெய் பசை குறைவே காரணம்.
- எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து சீழ் உருவாகி ஆசன வாய் வழியாக வெளியேறும். இதை பௌத்ரம் என்று அழைக்கின்றோம்.
- சிறுநீர் வழியாக சீழ், இரத்தம் மற்றும் உடலின் ஊட்ட சத்துகள் வெளியேறும்.
- தோலில் எண்ணெய் பசையில்லாமல் வியர்வை ஏற்படும். வியர்வையால் உடலில் ஈரபதத்தை தக்க வைத்துக் கொள்ள அடிக்கடி வியர்வை ஏற்படும்.
- அனைத்து மூட்டுகளுக்கும் எண்ணெய் பசை கொடுப்பதற்கு கொப்பரை தேங்காய்.
குணம் : நம்பிக்கை
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்வது அறிவு. புகைபிடிப்பது தவறு என்று புரிவது அறிவு. ஆனால் அந்த பழக்கத்தை விடுவதற்கு உறுதி வேண்டும். எனவே அறிவு என்பது வேறு. உறுதி அல்லது நம்பிக்கை என்பது வேறு. நம்பிக்கை ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும். அறிவு தகவல்களை மட்டும் தரும்.
ஏசியில் உட்கார்ந்து இருந்தால் கூட சிலருக்கு கை கால் வியர்க்கும். இதற்கு காரணம் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு. உடலில் ஈரபதம் வெளியாகிறது என்றால் அவர்களிடம் உறுதியோ அல்லது நம்பகத்தன்மையோ இல்லை என்று பொருள். ஒரு மனிதனுக்கு தன் மீது இறைவன் மீது இந்த இயற்கையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். யாருமே சரியில்லை என்று அவநம்பிக்கை ஏற்பட்டு நம்பகத்தன்மையே இல்லாமல் இருப்பார்கள். நம்பகத் தன்மை மிகவும் முக்கியம். நம்பிக்கை தான் மாற்றத்தை ஏற்படுத்தும். நம்பகத் தன்மை இருந்தால் தான் ஒரு பொருள் மற்றொன்றாக மாறும். இல்லையென்றால் மாறாது. அறிவு இருக்கின்றது. ஆனால் அது செயல்பட மனோபலம் வேண்டும்.
இந்த உலகில், நாட்டில் ஏன் எந்த மாற்றமும் ஏற்படவில்லை? எந்த அதிகாரத் தன்மையிலும் நம்பகத்தன்மை இல்லை. மக்கள் அரசாங்கத்தை நம்பவில்லை, மக்களை அரசாங்கம் நம்பவில்லை, கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பெற்றோர்கள் குழந்தைகளையும் நம்பவில்லை. யாரும் யாரையுமே நம்பவில்லை.
நம்பகத்தன்மை இழந்தால் அது நரகம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக, செல்வ செழிப்போடு, எல்லா உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அது சொர்க்கம். இப்படி ஒன்று மனிதனுக்கு கிடைக்குமா, தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது நம்பகத்தன்மையில் தான் இருக்கிறது. அவன் எண்ணத்தில் எப்படி இருக்கின்றானோ அப்படி தான் அவனுக்குண்டான உலகம் அமையும். நாம் நம்பகத் தன்மையோடு இருந்தால் நம்மை சார்ந்தவர்களுக்கும் அந்த எண்ணம் வரும்.
யாருக்கு உறுதியான எண்ணம் இருக்கிறதோ அவர்களின் எண்ணம் ஈடேறும். ஒருவரை முன்னேற்றம் அடைய செய்வதற்காக, வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்கும் என்றும், உன்னுடைய மனதில் உறுதியை இழந்து விடாதே, ஒரு விரதத்தை கடைபிடி என்றும், வைராக்கியத்துடன் உனது மனதினை திடப்படுத்திக் கொள் என்ற நம்பிக்கையை உண்டாக்கினார்கள்.
இதற்காகத் தான் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி என்ற விழா கொண்டாடப்படுகின்றது. சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் வைராக்கியம், நம்பிக்கை வேண்டும், இது இருந்தால் தான் மாற்றம் வரும், இல்லையென்றால் மாற்றம் வராது. இந்த விரதத்தின் குறிக்கோள் நம்பகத்தன்மையினை உறுதி படுத்துவது தான். இதுவே மிகப்பெரிய பலம். யார் ஒருவர் ஒரு கருத்தில் உறுதியாக இருக்கின்றாரோ அவரால் தான் சாதிக்க முடியும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
ஒரு செயலை செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்.
யாருக்கு உறுதி தன்மையில்லையோ அவர்களால் உடம்பில், வீட்டில், நாட்டில், உலகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது. கண்தானம், இரத்த தானம் இவற்றையெல்லாம் மிஞ்சிய ஒரு தானம் உள்ளது என்றால் அது “நம்பிக்கைதானம்”. ஒருவருக்கு நம்பிக்கையை தானமாக கொடுக்க வேண்டும். நம்பிக்கையை எப்படி ஒருவருக்கு தானமாக கொடுப்பது ? நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, நம்பிக்கை இழந்தவர்களுக்கு அவர்களும் மாற்றம் அடைவார்கள் என்ற நமது எண்ணத்தினை தானமாக கொடுக்க வேண்டும். அவர்களிடத்தில் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது. நம்மிடம் உள்ள ஒரு பொருளை இல்லாதவருக்கு கொடுப்பது தான் தானம். அது போல் நம்பிக்கை இல்லாத அவர்களுக்கு நாம் நம்பிக்கையை கொடுக்க வேண்டும். இந்த நம்பகத்தன்மை மூலமாக அவர்களுக்குள் மிகப் பெரிய மாற்றம் வரும். நம் மீதும் நமக்கு நம்பிக்கை வேண்டும். அது போல் மற்றவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியிருந்தால் அவரிடம் நாம் மாற்றத்தை பார்க்க முடியும். அவர் எப்படி இருக்கின்றார் என்று சொல்வது அறிவு. அவர் எப்படி ஆக வேண்டும்? என்று நினைப்பது தான் நம்பகத்தன்மை. நாம் நமது மனதிலிருந்து நம்பகத் தன்மையை கொடுக்க வேண்டும். நம்பகத்தன்மை இருந்தால் உறவுகள் பலப்படும்.
இந்த நம்பிக்கை தன்மை யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு தான் கொழுப்பு எலும்பு மஜ்ஜையில் சேமிப்பாகும். ஏன் ஒருவருக்கு சேமிப்பாகின்றது? மற்றொருவருக்கு சேமிப்பாகவில்லை என்றால் நம்பகத்தன்மை தான் காரணம். இவர்களின் உடல்வாகு இப்படி தான் என்று சிலர் கூற கேட்போம்.
“உன்னுடைய மனவாகு இப்படியிருப்பதால் தான்
உன்னுடைய உடல்வாகு இப்படியிருக்கின்றது”.
ஒரு மனிதனுக்கு வியாதி ஏன் வருகின்றது? நம்பகத்தன்மை இல்லாமல் வாழ்ந்தால் உடல் தளர்ந்து விடும். என்னடா வாழ்க்கை என்று நம்பிக்கை இழந்து விடுவார்கள். இது போன்றவர்களுக்கு நீங்கள் என்ன மருந்து, மாத்திரை, கொடுக்க முடியும்? ஒரு தன்மையை மற்றொரு தன்மையாக மாற்றும் ஆற்றல் நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. இதனால் தான் நம் வாழ்க்கை வெற்றி பெறும். பகுத்தறிவு என்பது ஒரு இடத்தை சுட்டிக் காட்டும். ஆனால் நம்பகத் தன்மை தான் அதை வழிநடத்தி, இறுதிவரை நம்மை கொண்டு போய் சேர்க்கும்.
- 2019-07-25T03:04:04